சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for ஓகஸ்ட், 2012

சித்தர்கள் தமிழகத்தில் மட்டும்தான் இருந்தார்களா?

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 28, 2012

சித்தர்கள் தமிழகத்தில் மட்டும்தான் இருந்தார்களா?

சித்தர் மரபு தமிழோடு நின்று விடாது: தமிழோடு சேர்ந்தது சித்தர் முறை அல்லது சித்தர் முறை தமிழோடு மட்டும் தான் சேர்ந்தது என்றமுறையிலும் வாதங்கள் வைக்கப் படுகின்றன. சித்தவைத்தியமே தமிழில்தான் ஆரம்பித்தது, வளர்ந்தது, மற்றமுறைகள் சித்தமுறையைப் பார்த்து கற்றுக்கொண்டன என்றெல்லாம் கூட எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. உண்மையில் “தமிழ் சித்தர்” பாரம்பரியம் என்று குறிப்பிடும்போது, மற்ற சித்தர்களின் பாரம்பரியங்கள் உள்ளதை ஒப்புக் கொள்வதாக ஆகிறது[1]. ஏனெனில், திருமந்திரத்தைத் தவிர வேறெந்த தமிழ் சித்தர் நூலும் காலத்தில் தொன்மையாகயில்லை. எல்லாமே சுமார் 100 முதல் 400 வருடங்களில் எழுதப்பட்டவையாகத் தெரிகிறது. திருமூலருக்கும் மற்ற இடைக்கால சித்தர்களுக்கும் ஏன் கால இடைவெளி உள்ளது என்று ஆராயப்படுவதில்லை. திருமூலர் மரபிலிருந்து அவர்கள் ஏன் மாறுபடுகிறார்கள் என்பதனையும் விளக்குவதில்லை.

இந்தியாவில் வழங்கி வருகின்ற சித்தபாரம்பரியம்: இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சித்தபாரம்பரியம் வழங்கி வருகின்றது. உதாரணத்திற்கு கீழ்கண்ட அட்டவணைக் கொடுக்கப்படுகிறது[2].

எண்

வங்காளம்

மஹாராஷ்ட்ரம்

ஆந்திரம்

பஞ்சாப்

1 ஆதி மச்சேந்திர சிவநாத் சிவா
2 மீன ஜாலந்தரா மீன உடேதயா
3 ஜாலந்தரி கோரக் சாரங்கதார மச்சேந்திர
4 கோரக் சரபத கோரக்ஸா ஜாலந்தரி-பா
5 மயனாமாடி ரேவன மேகநாத் கோரக்
6 கன்ஹா-ப கரின நாகார்ஜுன அர்ஜன் நாக
7 கோபிசந்த் பிரஹத்ஹரி சித்தபுத்து னீம்-பரஸ்-நாத்
8 பைல் பாடை கோபிசந்த் விருபாக்ஸா பத்ரிநாத்
9

கஹ்னி கணிக கணிப

எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை சித்தர்களின் சக்திகளை தாயுமானவர் தமது “சித்தர் கணம்” என்ற தலைப்பில் விளக்கியுள்ளாதாகக் கூறுகிறார். இந்த நவசித்தர்களின் பெயர்களை தமிழ் சித்தர்களாக பிள்ளை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்[3]:

  1. சத்திய நாதர்.
  2. சகோத நாதர்.
  3. ஆதி நாதர்.
  4. அனாதி நாதர்.
  5. வாகுலி நாதர்.
  6. மதங்க நாதர்.
  7. மச்சேந்திர நாதர்.
  8. கடேந்திர நாதர்.
  9. கோரக்க நாதர்.

ஆனால், இவர்கள் நிச்சயம் “தமிழ் சித்தர்கள்” இல்லை. அவர்கள் எல்லோரும் வேத, ஜைன, பௌத்த பாரம்பரியங்களில் வந்தவர்கள். அவ்வாறு ஜைன-பௌத்த மருத்துவப் பழக்கங்கள் மாற்றிவரும்போது, வழக்கங்களும் மாறும். அந்தந்த முறைகள் தாம் பெரியது, உயர்ந்தது என்று ஆதிக்கத்தில் உள்ளவர்கள் அமூல்படுத்தும் போது, நூல்களும் அவ்வாறே எழுதப்படும். ஆனால், மக்களால் எந்த மருத்துவமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டது, அல்லது அமூல் படுத்தப்பட்டுள்ள முறைகளில் எந்த மருத்துவக்கூறு அல்லது மூலம் உள்ளது என்பதனை படித்துப் பார்ப்பவர்களுக்குப் புரிந்து விடும்.

நாதசித்தர்கள் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள்: கோரக்கரை குருவாகக் கொண்ட நாத்-சம்பிரதாயம் சரித்திர ரீதியில் 13வது நூற்றாண்டில் காணப்படுகிறது. குஜராத்தில் ஜுனாகட் என்ற இடத்தில் இருந்த 1287ம் ஆண்டு கல்வெட்டின்படி, கோரக்கர், லகுலீச அல்லது பாசுபத குழுவினருன் சேர்த்துச் சொல்லப்படுகிறார்[4]. இத்தகைய ஆதாரங்களின் படி பார்க்குன் போது, நாத்-சித்தர்கள் பாசுபத மற்றும் காபாலிகர்களின் வம்சம் வழியாக வந்தவர்கள் என்று தெரிகிறது. ஆகையால் அவர்களுடன் மந்திர-தந்திர-யந்திய வழிபாடு, முறைகள் முதலியனவும் சேர்ந்து காணப்படுகின்றன.

முகமதியர்களின் படையெடுப்பினால் சித்தர்கள் தென்னிந்தியாவிற்குச் சென்றார்களா?: பி.வி.சர்மா சொல்வதாவது: “முஹம்மது பக்தியார் கில்ஜி 12ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தபோது, நாலந்தா மற்றும் விக்ரமசிலா பல்கலைக்கழகங்கள் காலியாகின. பேராசியர்கள், விஞ்ஞானிகள் முதலியோர் நேபாளம், பூடான், திபெத் மற்றும் தென்னிந்தியாவிற்கு ஓடிவிட்டனர். யாதவ வம்ச ஆட்சியாளர்களிம் தஞ்சம் புகுந்தபோது, அவர்கள் தேவநாகரியில் எழுத ஆரம்பித்தார்கள். தென்னிந்தியாவில் ரசசாஸ்திரம் சித்தர்கள் மூலமாக தொடர்ந்து வளர்ந்தது. சித்தர்கள் 18 என்று சொல்லப்படுகிறது. அவர்கள் காலம் 10 நூற்றாண்டு என்று கொடுக்கப்பட்டுள்ளது”. அந்த பல்கலைக் கழகங்கள் முகமதியர்களால் சூரையாடப்பட்டது, பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் துரத்தியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்; மருத்துமனைகள், சோதனைக்கூடங்கள், நூலகங்கள் சூரையாடப்பட்டு கொளுத்தப்பட்டன; ஆனால் தமக்கு வேண்டியவற்றை கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டார்கள். இதைத்தவிர முஹம்மது கஜினியின் படையெடுப்பு மற்றும் கொள்ளைகளால், மேற்கிந்திய விஞ்ஞானமே ஒழிந்தது எனலாம். ஏனெனில் அவன் பல மருத்துவர்கள், விஞ்ஞானிகளை தனது நாட்டிற்குப் பிடித்துச் சென்றுவுட்டான். உள்ள புத்தகங்களை அழித்துவிட்டான். பல்கலைக்கழகங்கள் அழிந்தபோது, தப்பியோடியவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்துள்ளனர் என்பதனால், அவர்கள் மூலம் சித்தர் பாரம்பரியம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

சக்தி வழிபாட்டில் சிறந்த 84-வகை சித்தர்கள்: தாந்திரிகமுறைப் பின்பற்றுபவர்கள் தாம் “சித்தர்கள்” என்று அழைக்கப்பட்டாதாக, வங்காளத்தில் அறியப்படுகிறது. வடகிழக்கு பகுதியில் தான் சக்தி வழிபாடு அதிகமாகக் காணப்படுகிறது. காமாக்கியா கோவில் அதன் மையமாக உள்ளது. சதியின் உடற்கூறுகள் விழுந்த ஒவ்வொரு இடமும் சக்திபீடமாக இருந்து, வழிபாடு நடைப்பெற்று வருகிறது. வங்காள பாரம்பரியத்தின்படி, 84-சித்தர்களான அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக, நகர்புறங்களில், கிராமங்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்[5]. இவர்கள் சக்திவழிபாட்டு முறையைக் கொண்டிருந்தனர். தந்திரம்-மந்திரம்-யந்திரம் என்ற ரீதியில், எலும்பு, மண்டையோடு முதலியவற்றுடன் இருப்பர். மண்டையோட்டில் பிச்சையேற்று உண்டு வந்தனர். பெண்ணின் தலைமுடியைக் கைகளில் கட்டியிருப்பர். ஆனால், தமிழ் சித்தர்கள் சிவனை வழிபடுபவர்கள். இருப்பினும் இந்த முரண்பாட்டை தவிக்க அல்லது மாற்ற பதினென் சித்தர்களின் மனைவியரின் பெயர்கள் சக்தியின் பெயர்களாக உள்ளன.

சித்தர்களின் தோற்றத்திற்கு முகமதிய படையெடுப்பு ஒரு காரணமா?: 13ம் நூற்றாண்டிற்கு முந்தையதாக வங்காளத்தில் தாந்திரிகம் அல்லது சித்த நூல் காணப்படாமல் இருப்பதனால், இந்த கோரக்கர் அல்லது நாதசித்த மரபு இந்து அல்லது பௌத்த மூலங்களினின்று ஆரம்பித்தது என்பதுடன், இஸ்லாமிய கலப்பினால் அல்லது இஸ்லாமியர்களுடன் சமசரசம் செய்து கொள்ளும் விதத்தில் அல்லது இஸ்லாமிய பீர்களைப் போல வாழ ஆரம்பித்ததால், இத்தகைய புதிய சாகை தோன்றியிருக்கலாம். அதனால் இவர்களுடைய சீடர்கள், பக்தர்கள் இவர்களை குரு, நாதர் என்று இந்துக்களாலும் ஒருபக்கமும் பீர் என்று முகமதியர்களால் மறுபக்கமும் அழைக்கப்பட்டனர். இத்தகைய விளக்கத்தை டேவிட் கார்டன் ஒயிட் என்பவர் கொடுத்துள்ளார்[6].

நாதசித்தர்களின் முறை தமிழகத்தில் உருமாறிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்: எப்படி பெரியபுராணம் மஹாரஷ்ட்ர “பக்த விஜயம்” போன்ற நூல்களின் தாக்கத்தில் உருவாகினவோ, அதேபோல, முகமதியர்களின் தாக்குதல்களுக்குத் தப்பியவர்கள், தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வந்தவர்கள், தத்தமது குருவின் பெய்ரைச் சொல்லிக் கொண்டு அல்லது தாமே புதிய பெயரை வைத்துக் கொண்டு, அத்தகைய குரு, நாத, சித்த பாரம்பரியத்தை உண்டாக்கியிருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் மலைகள், காடுகள், நகர்புறங்களில் மறைந்து வாழ வேண்டியிருந்ததால், எல்லோருடனும் இயைந்து போக வேண்டியிருந்தது அல்லது அவர்களுக்கேற்றப்படி, தமது கருத்துகளை வெளியிட்டிருக்கலாம். ஏனெனில் தினசரி வாழ்க்கைக்கு அவர்கள் அங்கிருக்கும் மக்களை நம்பித்தான் இருக்க வேண்டியிருந்தது.

© வேதபிரகாஷ்


[1] தமிழ் சித்தர், மலையாள மாந்திரீகம் என்ற முறையில் சொல்லவில்லை. இருப்பினும் அத்தகைய மொழிவழி திரிபுவாதங்கள் ஆராய்ச்சிகளில் உண்மையறியப் பயன்படாது. ஆராய்ச்சியாளர்கள் தனித்தனி கூடாரங்களில் இருந்துகொண்டு, சித்தாந்த, மனோதத்துவர போர்களை நடத்திக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.

[2] David, Gordon White, The Alchemical Body- Siddha in Medieval India, Unversity of Chicago Press, USA, 1984, p.93.

[3] M. S. Purnalingam Pillai, Tamil Literature, Tamil University, Thanjavur, 1985 (reprint of 1929 edition, pp.263.

[4]  David, Gordon White, The Alchemical Body- Siddha in Medieval India, Unversity of Chicago Press, USA, 1984, p.97.

[5] Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.28.

[6] David Gordon White, The Alchemical Body- Siddha in Medieval India, Unversity of Chicago Press, USA, 1984, p.109.

Posted in அக்னி, அண்டம், ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உடல், கந்தகம், கற்பம், கல்பம், காமாக்கியா, காயம், காற்று, சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்து, சூபி, தங்கம், தமிழ், திராவிடன், திராவிடம், தேவி, நரம்பு, நாதசித்த மரபு, நினைவு, நிலம், நீர், நெருப்பு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை, பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பீர், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மருந்து, மறைமலை அடிகள், முஹம்மது கஜினி, முஹம்மது பக்தியார் கில்ஜி, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள்

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 3, 2012

சித்தர்கள், சித்தமருத்துவம் பற்றிய ஆராய்ச்சி

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும் புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].

ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –

  • பரம்பரை சித்த வைத்தியர்,
  • மூன்று  பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
  • கைராச்சிக்காரர்,
  • தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,

அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய  நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை.  இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].

சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.

ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.

ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.

புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?:  பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்


[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.

[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.

[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.

[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.

[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.

[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.

[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.

[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.

[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.

[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.

[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.

[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.

[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.

[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.

N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், முஹம்மது கஜினி, முஹம்மது பக்தியார் கில்ஜி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »

Hello world!

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 3, 2012

Welcome to WordPress.com! This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

Happy blogging!

Posted in Uncategorized | 1 Comment »